search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் கையகம்"

    எண்ணூர் துறைமுகம் மற்றும் மகாபலிபுரம் சுற்றுவட்ட சாலைக்கு நிலம் கையகப்படுத்த பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி தலைமை தாங்கினார்.

    பெரியபாளையம்:

    எண்ணூர் துறைமுகம் மகாபலிபுரத்தை இணைக்கும் 200 அடி சென்னை சுற்று வட்டச் சாலையை திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கம், புன்னப்பாக்கம், அத்தங்கிகாவனூர், கிளாம்பாக்கம், அத்திவாக்கம் வழியாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள், விவசாயிகள், சங்க நிர்வாகிகள் சம்பத், கண்ணன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொது மக்கள் பேசும்போது, சாலை அமைக்கும் திட்டத்துக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நிலத்தை கையகப்படுத்த உள்ள சர்வே எண் மற்றும் அளவை முன் கூட்டியே அதாவது போர்க்கால அடிப்படையில் தெரியப்படுத்த வேண்டும்.

    இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட துறை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொது மக்கள், விவசாயிகள், அதிகாரிகள் என்று சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

    ×